தமிழ்library
, காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் – கால பைரவரும், தமிழ்library

காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் – கால பைரவரும்

காளி, காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் – கால பைரவரும், தமிழ்library

இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும். காளன் என்னும் சிவபெருமானின் துணைவி என்பதால் காளீ என்றழைக்கப்பட்டாள். காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற சொல்லிலிருந்து உருவானது. உண்மையில் காலீ என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். காலீ என்பதன் பொருள் காலத்தை வென்றவள் என்பதாகும். மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும். நாமும் காலீ என்றே அழைப்போம்.

காலீ காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும் இவளே. காலீ நேர்மையின் வடிவம். நாம் நேர்மையாக இருந்தால் காலீயை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்களே அழிவது நிச்சயம்.

காலீ ஞானத்தின் வடிவம். அறியாமை இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்குபவள். எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் பக்தர்களை காப்பவள். கருணையின் வடிவம். ஆனால் நமது பாரத நாட்டில் காலீயைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. அதாவது காலீ என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காலீயை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.

ஆனால் இது உண்மையல்ல. காலீ அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள். வெற்றிகளை அளிப்பவள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். காலீ ஞானத்தின் வடிவம். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள்.

மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே.

இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காலீ. காலீயின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சி. கொல்கத்தா தட்சினேஸ்வரத்தில் காலீயை வழிபட்டு அவளின் அருள் பெற்ற பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே மிகச் சிறந்த உதாரணம். மகாகவி காளிதாஸ், தெனாலிராமன் போன்றோரும் இதில் அடக்கம்.

காலீயின் பலவடிவங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரவல்லன. இதைப் பற்றி தனியான பதிவு வெளிவரும்.

இலங்கை வேந்தன் இராவணனின் மகன் மேகநாதன் என்றழைக்கப்பட்ட இந்திரஜித் காலீயை நோக்கி தவமும், வேள்வியும் நடத்தி இந்திரனையும் வெல்லும் ஆற்றல் பெற்றான். அவன் ராம லட்சுமணர்களை அழிக்க செய்த நிகும்பலை யாகம் அனுமனால் பாதியிலேயே அழிக்கப்பட்டது. அதனால் தான் அவன் அழிய நேரிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. நிகும்பலை என்பவள் இலங்கையில் உள்ள காலீயின் பெயர் ஆகும்.

வீட்டில் தினமும் விளக்கேற்றி 27 முறை கீழ்க்கண்ட மந்திரத்தினை நமது பூசையறையில் செபித்து இத்தகைய காலீயை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோம்.

“ஓம் ஹ்ரீம் மஹா காள்யை நமஹ“

காலபைரவர்

, காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் – கால பைரவரும், தமிழ்library

பைரவர் என்ற பெயருக்கு தன்னை அண்டியவர்களின் எதிரிக்ளுக்கு பயத்தை உண்டாக்கி அண்டியவர்களை கண்ணின் இமை போல காப்பவர் என்பது பொருளாகும். முத்தொழில்களையும் செய்வதால் அவருக்கு பைரவர் என்று பெயர் வந்தது. பாவத்தினை நீக்குபவர் மற்றும் அடியார்களின் பயத்தினை போக்குபவர் என்றும் பொருள் உண்டு. பைரவர் சிவனின் 64 வடிவங்களில் ஒருவர். அந்தகாசூரனை வதம் செய்ய இறைவன் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்பவர்.

பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அதில் ஒருவர் தான் காலபைரவர். காலபைரவர் காலத்தை வென்றவர். காலச்சக்கரத்தினை இயக்குபவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருக்கின்றன. இவரது மூச்சுக்காற்றிலிருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டாகின. இவற்றிலிருந்து தான் மற்ற காலக்கணித முறைகள் தோன்றின.

காலபைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் பயங்கரமானவர். உக்கிரமானவர். ஆனால் தன்னை அண்டியவர்களை கண்ணின் இமை போல் காப்பவர். இவரே கோவில்களின் காவல் தெய்வம். இதனால் இவருக்கு சேத்திரபாலன் என்ற பெயரும் உண்டு. இவரது அதிகார ஆயுதம் திரிசூலம் ஆகும். இது முத்தொழில்களைக் குறிக்கிறது. சிவ வடிவங்களில் பாவத்தை பொடிப்பொடியாக்கும் வடிவம் பைரவரே. இவரது அருளின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண இவரது அருள் மிகவும் முக்கியம்.

காலபைரவர் காலத்தையே மாற்றக் கூடியவர். அதாவது தன்னை அண்டியவர்களுக்காக அவர்களின் பாவ புண்ணிய கணக்கினை அழிக்கும் வல்லமை உடையவர். பாவம் மற்றும் புண்ணிய கணக்கை அழிப்பதன் மூலம் உயிர்களை பிறவி என்னும் கடலிலிருந்து மீட்பவர். பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு என்பது நிச்சயம். எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகிறதோ அப்போது தான் பிறவியிலா பெருநிலை கிட்டும்.

காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன. இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார். பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும். சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே. சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.

காலபைரவரின் வாகனம் நாய் ஆகும். இதற்கு ஞான ஞமலி என்றும் பெயர் உண்டு. நாய்களுக்கு உணவளிப்பதும், அவற்றை பேணி பாதுகாப்பதும் ஒரு வகை பைரவ வழிபாடே ஆகும். காலத்தின் காவல் தெய்வம் என்பதாலேயே இவருக்கு காலபைரவர் என்று பெயர் வந்தது. காலத்தை இயக்கும் பைரவர் காலபைரவர் ஆவார்.

இவ்வுலகில் பாவபுண்ணியங்களை அழித்து பிறவியிலா பெருநிலை அடைய நினைப்பவர்கள் காலபைரவரை தினமும் வழிபடவேண்டும். காலபைரவரை ஒவ்வொரு சிவத்தலத்திலும் காணமுடியும். அவரை வழிபட்டு நமது கர்ம வினைகளை அழித்து பிறவியிலா பெருநிலை பெறுவோம்.

வீட்டில் தினமும் விளக்கேற்றி 27 முறை கீழ்க்கண்ட மந்திரத்தினை நமது பூசையறையில் செபித்து இத்தகைய காலபைரவரை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோம்.

“ஓம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ”

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: