நம் வாழ்வில் நடக்கும் சில விஷயங்களையும், நாம் செய்யும் சில செயல்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அப்படி பகிர்ந்து கொள்வதினால் அந்த செயலின் மூலம் நாம் பெறும் பலனை நம்மால் முழுமையாக அடைய முடியாது. அப்படி நாம் எதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என்பதை நம் முன்னோர்கள் கூறிய பொதுவான விஷயங்களையும், சாணக்கியர் கூறிய நெறிமுறைகளையும் காண்போமா.
பொதுவான விஷயங்கள்: நாம் மற்றவர்களுக்கு செய்யும் தான தர்ம செயல்களை பற்றி அடுத்தவர்களிடம் கூறக்கூடாது.
நீங்கள் செய்யும் தானம் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் கூட வெளியே சொல்லக்கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது என்பார்கள். அடுத்தவர்களுக்கு தெரியலமா? அப்படி வெளியே சொல்வதன் மூலம் நீங்கள் செய்த பயனை உங்களால் முழுமையாக அடைய முடியாது என்பது உண்மை.
நம் வீட்டில் எவ்வளவு தான் கஷ்டங்கள் இருந்தாலும் அதை நம் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ சொல்லக்கூடாது. முடிந்தவரை நம் கஷ்ட நஷ்டங்களை நாமே சரி செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
வீட்டில் நாம் இறைவனுக்காக செய்யும் பூஜைகளை பற்றியும், கோவிலுக்குச் சென்று வந்த அனுபவங்களை பற்றியும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இவை கடவுள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்வுகள். இதை நம் மனதிற்குள் தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
நம் உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் மற்றவர்களிடம் கூறும்போது எதிர்மறை ஆற்றல் உருவாகும் என்ற கருத்து உள்ளது. இதனால் உடல்நிலை பற்றிய ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.
நாம் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி லட்சியங்களை வைத்திருப்போம். அந்த லட்சியத்தின் குறிக்கோளை நாம் அடைந்து வெற்றி பெறும் வரை அதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் லட்சியம் என்ன என்று யாராவது கேட்டால் கூட, உங்கள் உண்மையான லட்சியத்தை வெளியே சொல்லாமல் வேறு ஒன்றை மாற்றி சொல்வது தவறு இல்லை.
ஒரு பெண்ணை களங்கப்படுத்தும் வகையில் நாம் மற்றவர்களிடம் அநாவசிய பேச்சுக்களை பேசக்கூடாது. நம் குடும்ப பிரச்சனைகள் நம் வீட்டின் படியை விட்டு தாண்டி வெளியே போகக்கூடாது. நம் வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் அதைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது. இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு மதிப்பிலான பொருட்களை வாங்க முடிகிறது என்று, மற்றவர்கள் நினைக்கும் கண்திருஷ்டியானது அவ்வளவு நல்லதே அல்ல.
இப்படிப்பட்ட பொதுவான விஷயங்களை நாம் இலைமறை காய்மறையாக மறைத்து தான் இந்த உலகத்தில் வாழ வேண்டி இருக்கின்றது.
சாணக்கிய நீதி
1. நாம் இழந்த செல்வ செழிப்பை மற்றவர்களிடம் கூறக்கூடாது.
2. நமது சொந்த வாழ்வில் நடந்த சோக ரகசியங்கள் ரகசியமாக தான் இருக்க வேண்டும்.
3. கணவனின் நடத்தையைப் பற்றி மனைவியும் மனைவியின் நடத்தையை பற்றி கணவனும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. அவர்களது பிரச்சினை அவர்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வது நல்லது.
4. ஒரு கீழ்த்தரமான மனிதன் வாயிலிருந்து வரும் சொற்களை பற்றியும், நமக்கு நடந்த இழிவான சம்பவங்களையும் வெளியில் பகிர கூடாது. இவை சாணக்கியரால் நமக்கு வழங்கப்பட்ட நெறிமுறைகள். இதனை பின்பற்றுபவர்கள் இந்த உலகத்தில் சிறந்த மனிதர்களாக போற்றப்படுவார்கள்.
Add comment