தமிழ்library
பத்தாவது பாஸ்

பத்தாவது பாஸ்

நாதஸ்வரம் மற்றம் மேளதாளத்துடன் பாண்டித்தேவரும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர்.

மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா

“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”

“ஆமாம்”

“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”

“ஆமாம்”

“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”

இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்

இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.

“ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர்.

ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டித்தேவர் வசதியானவர் என்று சொல் முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு.

அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான்.

இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.

“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டித்தேவர்.

“நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர்.

பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

“பாண்டித் தேவர் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் பாண்டித்தேவர்.

“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு.

பாண்டித்தேவருக்குப் பெருமையாக இருந்தது.

அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: