தமிழ்library
ஆசை

ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.

பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது.

பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.

மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.

“நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா.

“நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார்.

மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான்.

வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.

பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.

ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர்,

“உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார்.

முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான்.

“ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?”

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.

“நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”

“உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: