தமிழ்library
புத்திசாலி ஆட்டுக்குட்டி

புத்திசாலி ஆட்டுக்குட்டி

அந்த அடர்ந்த காட்டில் நரி ஓநாய் சிங்கம் கரடி என ஏராளமான மிருகங்கள் வாழ்ந்து வந்தன. எல்லா மிருகங்களும் நன்கு கொழுத்த உடலோடு நடமாடிக் கொண்டிருந்தன. அதற்கு காரணமும் உண்டு. அந்தக் காட்டை ஓட்டியுள்ள சிறுகிராமத்தில் முத்துசாமி என்ற ஏழை வாழ்ந்து வந்தான். 

அவனது ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடி மேய்ந்து கொண்டே வழி தவறி காட்டுக்குள் வந்து விடும். அவ்வளவுதான் உடனே அதை காலிசெய்து விடும் இந்த மிருகங்கள். முத்துசாமி தனது தந்தை தனக்காக சொந்தமாகக் கொடுத்த நாற்பது ஆடுகளையும் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தான். 

இப்போது மொத்தம் பனிரென்டு ஆடுகளே மிஞ்சியிருந்தது. இதனால் முத்துசாமி மிகுந்த வேதனை அடைந்தான். சாப்பிடக் கூட மனமில்லாமல் துவண்டு போய் ஆடுகளை அடைத்து வைத்திருந்த பட்டியின் அருகில் படுத்துவிட்டான். ‘கண்ணுங்களா! நீங்களாவது என்னை விட்டு போயிடாம பத்திரமாக இருங்கப்பா. என்கண்ணைத் தப்பி வெளியே போயிடாதீங்க. அவ்வளவுதான் அந்த கொடிய மிருகங்கள் உங்க எலும்பைக் கூட விட்டுவைக்காதுங்க. அதனால பாதுகாப்பா இங்கேயே இருங்கப்பா. என்னை மேலும் மேலும் வேதனைப்பட வைக்காதீங்க’ –என்றபடியே தரையில் படுத்து சற்று நேரத்தில் தூங்கியும் விட்டான். 

அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஆடுகள் முத்துசாமியின் நிலையைக் கண்டு மனம் வருந்தின. தங்களை வளர்த்து ஆளாக்கியவன் துன்பத்தை அவைகளால் தாங்கமுடியவில்லை. அவனுக்கு தங்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என வேதனைப் பட்டன. 

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஆடு ஒன்று தன் அம்மாவிடம் “அம்மா! எத்தனைநாள்தான் நாம் ஓடியாடி விளையாட முடியாமல் நம் விருப்பத்திற்கு புற்களை மேயாமல் இப்படி பட்டிக்குள்ளேயே அடைந்து கிடப்பது. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டாமா” –என்றது. தாய் ஆடு தனது பிள்ளையை பரிவோடு நக்கியது. “மகனே! உன் கவலை எனக்கு புரிகிறது. ஆனால் இது தானே நமக்கு பாதுகாப்பு வளையம். இதைத் தாண்டிப் போன நம் உறவினர்களின் நிலை என்னவாயிற்று என்பதுதான் உனக்குத் தெரியுமே. தெரிந்தும் நீ வெளியே செல்ல ஆசைப்படலாமா. பாவம் நம் ஏஜமானர் நம்மில் பாதிக்குமேல் இழந்து தவிக்கிறார். அவருக்கு நாம் எந்த கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது. நமக்குத் தேவையான உணவுதான் கிடைக்கிறதே. சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்வோம்” –என்றது தாய் ஆடு. 

மறுப்பாக தலை அசைத்தது குட்டி ஆடு. “அம்மா உங்களைப் போல் என்னால் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். அப்போதுதான் நாம் சுதந்திரமாக நடமாடமுடியும். நம் எஜமானரும் இப்படி நமக்காக காவல் இருக்காமல் அவரது வேலையைப் பார்க்க முடியும். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்” –என தனது திட்டத்தைக் கூறியது. 

அதைக் கேட்ட மற்ற ஆடுகளுக்கு சந்தோஷம் தாளவில்லை. “டேய் கண்ணா! நீ மட்டும் இதை வெற்றிகரமா செய்து முடித்து விட்டால் நமக்கொல்லாம் இந்த சிறையிலிருந்து விடுதலை. நமது இஷ்டத்திற்கு மேய்ந்து விட்டு இரவில் வீடு திரும்பினால் போதும். நீ இதை சரியாகச் செய்து விடுவாயல்லவா” –என்றது வயது முதிர்ந்த ஆடு. 

தாய் ஆடு பதறியது. “மகனே! வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. எனக்கு ஒரே மகன் நீ. உன்னை ஒருபோதும் நான் இழக்கமாட்டேன். காட்டுக்குள் போய் விட்டு திரும்பியவர் எவருமில்லை. நான் உன்னை அனுப்ப மாட்டேன்” –என்று கண்ணீர் சிந்தியது. “அம்மா அழாதே! நான் புத்திசாலி என்று நீதானே அடிக்கடி சொல்வாய். இப்போது நீயே தடை போடலாமா. நம் இனத்தை எப்படி அழித்தன அந்த மிருகங்கள். அவற்றை நம்மால் அழிக்க முடியவிட்டாலும் விரட்டியடிக்கலாமே. அம்மா தைரியமாக இரு. நான் வெற்றியோடு திரும்புவேன். பாட்டி அம்மாவுக்கு தைரியம் சொல். நான் வெற்றிச் செய்தியோடு வருகிறேன்” –என்றவாறு பட்டியின் மீதேறி தாவி வெளியில் குதித்தது உற்சாகமாக துள்ளியவாறு காட்டை நோக்கிச் சென்றது. 

காட்டிற்குள் நாலைந்து நரிகள் குறுக்கும் நெடுக்குமாய் பசியோடு உலாவிக் கொண்டிருந்தது. பசி உயிரை எடுக்கிறது. ஒரு ஆடு கூட இரண்டு நாளாக கண்ணில் படவில்லையே. பட்டிக்காரன் உஷாராகி விட்டானா என தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருந்தன. அப்போது சற்று கரகரப்பான வித்தியாசமான குரலில் காட்டுக் கொடிகளுக்கிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த கொழுத்த ஆட்டுக்குட்டி அதன் கண்ணில் பட்டது. “ஆஹா! இரண்டு நாளாய் காய்ந்து கிடந்ததற்கு இன்று நல்ல விருந்து வாருங்கள் போகலாம்” –என்றவாறு ஆட்டுக்குட்டியை நெருங்கியது. 

ஆட்டுக்குட்டி அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்தது. அருகில் நரிகள் வருவதைக் கண்டதும், “வாருங்கள், வாருங்கள். எம் பொருமான் உங்களை அனுப்பி வைப்பதாக இப்போதுதான் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் வந்துவிட்டீர்களா? ம் சீக்கிரம் வந்து எனக்கு இரையாகுங்கள். எனக்கு பயங்கர பசி” –என்று உறுமலான குரலில் அதட்டியது. 

நரிகளுக்கு பயங்கர அதிர்ச்சி. ஓரடி பின் வாங்கின. “என்னடா. இது? நம்மையே சாப்பிடப் போகிறதாம் இந்த ஆட்டுக்குட்டி. அதுவும் கடவுளே அனுப்பிவைத்தார் என்கிறது. இதன் குரல் கூட ஆடு குரல் போலில்லையே. நரிகள் தயங்கி நின்றன. “என்ன தயக்கம்! சீக்கிரம் வாருங்கள். உங்களை சாப்பிட்டு விட்டு இக்காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும் சாப்பிடவேண்டும். இது எம் பெருமானின் கட்டளை. முதலில் உங்கள் தலைவரான சிங்கத்தைத் தான் சாப்பிடலாம் என்றிருந்தேன். அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள். அதனாலென்ன முதலில் சிறிய விருந்து. பிறகு பெரிய விருந்து…ஹாஹா” –வென பயங்கரமாக சிரித்தது. 

நரிகள் பிடரியில் கால்பட விழுந்தடித்துக் கொண்டு ஒடின “ஐயோ! நம்மை அழிக்க ஏதோ எமன் வந்துவிட்டான். ஓடுங்கள் ஓடுங்கள் எல்லோரும் ஓடுங்கள்”. என்றவாறு ஒடியது. எதிரே வந்த சிங்கம் கர்ஜித்தது. “என்ன உளறுகிறாய். நம்மை அழிக்க யாருக்கு துணிவுண்டு” –என்றது. நரிகள் தாங்கள் பார்த்ததை கூறியது. 

சிங்கம் கெக்கலித்தது. “உங்களுக்கு பைத்தியமா பிடித்தருக்கிறது. ஒரு அற்ப ஆட்டுக்குட்டி நம்மை அழிப்பதா. வாருங்கள் என்னுடன். அதை ஒரு கை பார்த்து விடுகிறேன்.” –என்றவாறு புறப்பட்டது. அதற்குள் நரிகளின் கூக்குரல் கேட்டு அனைத்து மிருகங்களும் கூடிவிட்டன. 

அனைவரும் படையாக புறப்பட்டு ஆட்டுக்குட்டியைத் தேடி புறப்பட்டன. தூரத்தில் இதைப்பார்த்த ஆட்டுக்குட்டிக்கு உள்ளுக்குள் பதறினாலும் சற்று தெம்பாகவே நின்றது. மனதிற்குள் உறுதியைக் கூட்டிக்கொண்டு, கொஞ்சம் பதறினாலும் எல்லாமே வீண் என்ற நினைப்புடன் நிமிர்ந்து நின்றது. அதற்குள் மிருகக்கூட்டம் தன்னை நெருங்கிவிடவும். பரவாயில்லையே. எம்பெருமான் சொன்னார். நீ எங்கும் போகாதே. அனைவரும் உனக்கு விருந்தாக அவர்களே உன்னைத் தேடிவருவார்கள் என்று சொன்னார். அதே போல் வந்துவிட்டீர்களே. ம் முதலில் ராஜா நீர் வாரும். உம்மைத் தின்னத்தான் எனக்கு பெருத்த ஆவல். அற்புறம் அனைவரும் வரிசையாக நில்லுங்கள். ஒருவரையும் விட்டு விடமாட்டேன். உங்கள் அனைவரையும் அழித்து விட்டு இந்தக் காட்டில் காவல் தெய்வமாக என்னை இருக்கவே எம்பெருமான் உத்தரவிட்டார். “ம். ம்.. ராஜா வா. எனக்கு பசிக்கிறது.” –கூக்குரலெடுத்து அலறியது. 

அவ்வளவுதான் அனைத்து விலங்குகளும் திசைக் கொண்றாக அலறிப் புடைத்து பறந்தோடின. ஆட்டுக்குட்டி ஒரு வெற்றிச் சிரிப்போடு காடு முழுவதும் சுற்றியது. எந்த ஒரு விலங்குகளும் இல்லையென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டது. ம்ஹூம். எவ்வளவு மாமிசங்கள் தின்று உடல் கொழுத்து என்ன பலன். ஒரு ஆட்டுக்குட்டிக்கு இருக்கும் மூளைகூட இந்த மிருகங்களுக்கு இல்லையே. என்றவாறு உற்சாகமாக தனது பட்டிக்குச் சென்று அனைவரிடமும் நடந்ததைக் கூறியது. 

அனைத்து ஆடுகளும் அதைக் கொஞ்சி மகிழ்ந்தன. அன்றிலிருந்து அவர்கள் அனைவரும் தங்கள் விருப்பம் போல் காடு முழுவதும் சுற்றி மேய்ந்து சந்தோஷமாக வாழ்ந்தன. 

கதையின் நீதி: புத்திகூர்மையும் மனதிடமும் இருந்தால் யாரையும் வீழ்த்திவிடலாம். 

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: