தமிழ்library
முத்திரை மோதிரத்தின் மகிமை

முத்திரை மோதிரத்தின் மகிமை

அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!” என்று விமரிசித்தார்.

“பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் ஒரு சக்ரவர்த்தியின் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால் எந்த சாதனையும் புரியாமல் சக்ரவர்த்தி ஆகிவிட்டீர்கள். ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய பெருமைக்கும், பெயருக்கும் காரணம் திறமை மட்டுமே! உங்களைப் போல் பிறப்பினால் அடையவில்லை. உழைத்துப் பெற்றவன் நான்!” என்று பெருமை பேச அக்பருக்கு இலேசாகக் கோபம் வந்தது. “என்ன உளறுகிறாய்?” என்று கேட்டார் அக்பர்.

“சரியாகத்தான் சொல்கிறேன். என் மூளையை யாரும் என்னிடம் இருந்து திருட முடியாது? அதனால் என் சக்தியும், பெருமையும் என்றென்றும் இருக்கும். ஆனால், உங்கள் மகுடமும், முத்திரை மோதிரமும் உங்களிடம் இருக்கும் வரைதான் உங்களுக்கு சக்தி உண்டு. அவற்றைப் பறித்து விட்டால் நீங்கள் செல்லாக் காசு! உங்களுக்கு மதிப்பே கிடையாது” என்றார் பீர்பால்.
சினம் தலைக்கேறிய அக்பர், “நீ சொல்வதை நிரூபித்துக் காட்டு! இல்லை என்றால் உனக்கு மரண தண்டனை!” என்று பீர்பாலைப் பார்த்து சீறினார். அன்றிரவு பீர்பால் படுக்கையில் படுத்தவாறே அக்பரின் சவாலை சமாளிப்பது எப்படியென்று சிந்தனை செய்தார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அன்றிரவு பீர்பால் படுக்கையில் படுத்தவாறே அக்பரின் சவாலை சமாளிப்பது எப்படியென்று சிந்தனை செய்தார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அடுத்த நாள் வழக்கப்படி பீர்பால் தர்பாருக்கு வந்தார். அக்பர் வழக்கப்படி பீர்பாலுடன் பேசினாலும், அன்று அவர் இயல்பான பிரியத்துடன் பேசவில்லை. தான் நேற்று கூறியது அவருடைய மனத்தை பாதித்து இருக்கிறது என்று பீர்பால் உணர்ந்து கொண்டார்.

இரண்டு வாரங்கள் சென்றன. வாரத்திற்கு ஒருமுறை அக்பர் இரவு நேரத்தில் மாறுவேடமணிந்து தனியாக நகர்வலம் வருவது வழக்கம்! நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது. மக்கள் மனநிறைவுடன் இருக்கின்றனரா என்றெல்லாம் நேரில் கண்டறியவே அவர் அவ்வாறு செய்வார்.

மாறுவேடமணிந்து செல்லும்போது, அக்பரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அஷ்ரப் எனும் ஒப்பனைக் கலைஞர் மிக அழகாக வேடம் அணிவிப்பார். அஷ்ரப்பும், பீர்பாலும் நண்பர்கள். ஒவ்வொரு முறை அக்பருக்குப் புதிய வேடம் அணிவிக்கும்போது அஷ்ரப் பீர்பாலைக் கலந்து ஆலோசிப்பார். இந்த வாரத்தில் இந்த மாறுவேடம் அணியப்போகிறார் என்பதை பீர்பால் முன்கூட்டியே ஊகித்து விடுவார். அக்பருக்கு எப்படி ஒப்பனை செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற உத்திகள் பீர்பாலுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை அவர் அஷ்ரப்புக்குச் சொல்லிக் கொடுப்பார்.

ஒருநாள் மாலை அஷ்ரப் பீர்பாலைத் தேடி வந்தார். “இன்றிரவு அக்பர் மாறுவேடம் அணியப்போகிறார். அவருக்குப் பிச்சைக்காரர் வேடம் போட்டு விடலாமா?” என்று பீர்பாலைக் கேட்டார.

“தாராளமாகச் செய்! சக்ரவர்த்தியையை பிச்சைக்காரனாக்கும் சக்தி உனக்குத்தான் உண்டு” என்ற பீர்பால் தொடர்ந்து, “அவருக்கு ஒட்டுப்போட்ட சட்டையும், பைஜாமாவும் அணிவிப்பாய். பழைய, கிழிந்த துணியினால் தலைப்பாகை செய்! தேய்ந்து போன செருப்புகளைக் கொடு. முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் கறுப்பு வண்ணக் கோடுகள் போட்டு, சாயம்பூசி சுருங்கிய தோலும், வெயில்பட்டுக் கன்றிய முகமுமாக இருப்பதுபோல் செய்!” என்றார்.

அஷ்ரப் பீர்பால் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டபின் அங்கிருந்து அகன்றார். “நான் நினைப்பது நடக்கும் என்று தோன்றுகிறது” என்று பீர்பால் புன்னகைத்தார். பிறகு தன் மனைவியை அழைத்துத் தனக்கும் பிச்சைக்காரன் வேடம் அணிவிக்க வேண்டினார்.

“இந்த நேரத்தில் உங்களுக்கு எதற்குப் பிச்சைக்காரன் வேடம்?” என்று அவள் கேட்டாள்.

“ஊர் முழுவதும் சுற்றி பிச்சை எடுக்கப் போகிறேன். அப்போது தான் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை எத்தனை கஷ்டமானது என்று உணர முடியும்” என்றார் பீர்பால்.

“நீங்களும், உங்கள் யோசனையும்!” என்று அவள் ஏளனமாகப் பேசினாலும், பீர்பாலுக்குப் பிச்சைக்காரன் வேடம் போட்டுவிட மும்முரமாக முயன்றாள். பழைய, ஒட்டுப்போட்ட துணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவித்தாள். பழைய, பிய்ந்து போன செருப்புகளை அணிவித்தப்பின்-, முகத்திலும், கழுத்திலும் சாயங்கள் பூசி அசல் பிச்சைக்காரனைப் போல் தோற்றமளிக்குமாறு செய்தாள். வேடம் நன்றாகப் பொருந்தி இருக்கிறது என்று திருப்தி அடைந்தபின் அவரை அனுப்பி வைத்தாள்.

வீட்டை விட்டுப் பிச்சைக்காரன் வேடத்தில் வெளியேறிய பீர்பால் நேராக அரண்மனையை நோக்கி நடந்தார். அரண்மனை வாயிலில் இருந்து ஒதுங்கி ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு காத்து இருந்தார். சிறிது நேரத்தில் அரண்மனை வாயிற்கதவுகள் திறக்க ஒரு பிச்சைக்காரன் வெளியே வந்தான். அவனை காவலர்கள் வணங்கினர்.

‘பிச்சைக்காரன் உண்மையில் யார் என்று இவர்களேக் காட்டிக் கொடுத்துவிட்டனர்’ என்று எண்ணிய பீர்பால் “ஏய், பிச்சைக்காரா? உன்னுடன் நானும் சேர்ந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். “யாரடா நீ?” என்று குரலில் அதிகாரம் தொனிக்க பிச்சைக்காரன் வேடத்திலிருந்த அக்பர் பீர்பாலைப் பார்த்துக் கேட்டார்.

“நானும் உன்னைப் போல் பிச்சைக்காரன்தான்” என்று பீர்பால் சொல்ல, “நான் பிக்சைக்காரன் இல்லை” என்று அக்பர் மறுத்தார்.

“பின்னே என்ன, நீ சக்ரவர்த்தியா?” என்று பீர்பால் வேண்டும் என்றே விஷமமாகக் கேட்க, “ஆம்! நான் அக்பர்! மாறுவேடத்தில் இருக்கிறேன்” என்றார் அக்பர்.

“யாரிடம் கதை விடுகிறாய்? அக்பர் நீதான் என்றால் உன் முத்திரை மோதிரம் எங்கே?” என்று பீர்பால் வம்பு செய்தார்.
“என்னிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது. ஆனால், அதை உன்னிடம் நான் ஏன் காட்ட வேண்டும்?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லையானால் நீ சொல்வதை எப்படி நம்புவது? நானும் உன்னைப் போல் பிச்சைக்காரன்! அந்த உரிமையில் கேட்கிறேன்” என்றார் பீர்பால்.

“சந்தேகமிருந்தால் இதோ பார்!” என்று முத்திரை மோதிரத்தை தன் விரலில் இருந்து கழற்றி அக்பர் காட்டினார்.
“அது உண்மையா இல்லை போலியா? கொடு, பார்க்கலாம்” என்று அதை சோதிப்பவர் போல் பீர்பால் அக்பரிடமிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்டார்.

“அட! நிஜமாகவே இது சக்ரவர்த்தியின் முத்திரை மோதிரம்தான்! ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று பீர்பால் ஆச்சரியப்படுபவர் போல் நடித்தார். “முட்டாளே! நான்தான் அக்பர் என்று சொல்கிறேனே! என்னிடமில்லாமல் வேறு யாரிடம் இது இருக்கும்?” என்று அக்பர் சீறிவிழ, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, அங்கு சில காவல் வீரர்கள் வந்தனர். “இவனைப் பிடித்துச் செல்லுங்கள்! இவன் ஒரு திருடன்!” என்று பீர்பால் கூச்சலிட அவர்கள் அக்பரைப் பிடிக்க வர, “முட்டாள்களா! நான்தான் சக்ரவர்த்தி!” என்று அக்பர் கூச்சலிட்டார்.

“அவன் பொய் சொல்கிறான். நான்தான் சக்ரவர்த்தி!” என்று சொல்லி பீர்பால் முத்திரை மோதிரத்தைக் காட்ட, அவர்கள் அக்பரைக் கைது செய்ய முயன்றனர்.“சரி சரி! அவனை விட்டுவிடுங்கள்” என்று பீர்பால் கூற அவர்கள் பீர்பாலுக்கு சலாம் செய்துவிட்டுச் சென்றனர்.

மறுநாள் அரண்மனையில் அக்பரைத் தனியாக சந்தித்த பீர்பால், “பிரபு! நேற்று உங்கள் மோதிரத்தைத் தொலைத்து விட்டீர்களா?” என்று கேட்க, அக்பர் ‘ஆம்’ என்று தலை அசைத்தார்.

“இதோ, உங்களுடைய மோதிரம்!” என்று பீர்பால் மோதிரத்தை அக்பரிடம் கொடுத்தார். உடனே நேற்றிரவு தான் மாறுவேடத்திலிருந்த போது தன்னுடன் தகராறு செய்து அவமானப்படுத்தியது பீர்பால்தான் என்று தெரியவர, அக்பர் கோபத்தில் துடித்தார்.

உடனே பீர்பால், “பிரபு! தயவு செய்து கோபப்படாதீர்கள்! உங்களை அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல! சில நாள்களுக்கு முன் நமக்குள் நடந்த விவாதம் நினைவிருக்கிறதா? என்னுடைய பெருமை, கௌரவம் ஆகியவை என் திறமையினால் பெற்றவை என்றும், உங்களிடம் அதிகாரச் சின்னங்களான மகுடமும், மோதிரமும் இருக்கும் வரைதான் உங்கள் அதிகாரம் செல்லுமென்றும் கூறினேன். அதை நீங்கள் நிரூபித்துக் காட்டச் சொன்னீர்கள், அதைத்தான் நான் நேற்று நிரூபித்துக் காட்டினேன். உங்களிடம் உள்ள முத்திரை மோதிரத்திற்குள்ள சக்தி உங்களுக்கில்லை என்று காட்டி விட்டேன்” என்றார்.

ஒரு கணம் கோபத்தில் துடித்தாலும், மறுகணமே அக்பருடைய கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. பலமாக சிரித்த அக்பர், “போக்கிரிப் பயலே! சாமார்த்தியமாக என்னை மடக்கி விட்டாயா? உன்னுடன் சவாலிட்டு ஜெயிக்க முடியுமா? நீ அதிபுத்திசாலி ஆயிற்றே!” என்று புகழ்ந்தவர், பீர்பாலுக்கு பொற்காசுகள் நிரம்பிய ஒரு பட்டுப் பையை பரிசளித்தார்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: